நம்பிவந்த
எங்களை பணத்திற்கு
பகடைக் காய்களாக்கி;
சுக பிரசவத்தை
தடுத்திட நினைத்தாயோ;
என் நரம்புகளெல்லாம்
அறுத்திட துடித்தாயோ!
அனஸ்தடிக் என்றாய்;
அறுத்தெடுக்க
தனி கட்டணம் என மென்றாய்;
உயிர் பயம் காட்டி;
எங்கள் உள்ளத்தை வாட்டி;
உன் கட்டடத்தை உயர்த்துகிறாய்;
அதற்குதானா எங்கள்
பணத்தை உருவுகிறாய்!
விழித்து - நான்
துடித்து ஈன்றாலும்
இரு நாளில் கழிந்திருக்குமே;
இப்படி…
அறுத்தெடுத்து
அடுத்தப் பிள்ளைக்கும்
கத்தியுண்டென சப்தமில்லாமல்
உணர்த்தினாயோ!
கருத்தடைக்கு நாங்கள்
கறுப்பு கொடிக்
காட்டுவதாலோ - இப்படி
கழுத்தறுக்கிறாய்;
இரண்டுக்கு மேல் இனியில்லை
என தகவல் கொடுக்கிறாய்!
வெள்ளை சட்டைக்குள்
ஒளிந்திருக்கும்
அரசாங்க அனுமதிப்பெற்ற
முகமூடி கொள்ளையன் நீயோ;
வயிற்றில் கத்தி வைக்க;
பணத்திற்காக
கழுற்றில் கத்தி வைக்கும்
படித்த திருடனும் நீயோ!
சிசுவென கூறி
தசைகளை அறுத்தாய்;
என் நரம்புகள்
ஆயிரக்கணக்கில் ஊனமாக்கி;
இறுதியாய்
சிஷேரியன் தொகை என
சில ஆயிரங்களுக்கு
உண்டியலையும் உனதாக்கி!
பணம் மட்டுமே பிரதானமா?
அதற்குதான் இந்த வருமானமா?
மருத்துவ தொழிலிலுக்கு
இது இல்லையா அவமானமா?
நம்பிவரும் என் இனத்திற்கு
இதுதான் வெகுமானமா?